பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு அழைப்பில்லாது கலந்துகொண்ட நபரொருவர் கொண்டாட்டம் இடம்பெற்ற மண்டபத்தின் உரிமையாளரின் வீட்டுக்குள் நுழைய முற்பட்டபோது அங்கிருந்தவர்களால் பிடிக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பம் ஆராச்சிக்கட்டு பகுதியில் இடம்பெற்றுள்ளது.
ஆராச்சிக்கட்டு பிரதேசத்தில் அமைந்துள்ள முன்னணி விழா மண்டபத்தில் நேற்று குறித்த பிறந்த நாள் வைபவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த வைபவத்திற்கு அழைப்பில்லாமல் சென்று கலந்து கொண்ட நபர் ஒருவர் ஒருவருக்கும் தெரியாதவாறு விழா மண்டப உரிமையாளரின் வீட்டுக்குள் நுழைய முற்பட்ட போது அங்கிருந்தவர்களால் பிடிக்கப்பட்டு தாக்கப்பட்டதில் பலத்த காயங்களுக்கு உள்ளான குறித்த நபர் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஆராச்சிக்கட்டு பொலிஸார் தெரிவித்தனர்.
ஜாஎல பமுனுகம பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவராவார்.குறித்த மண்டபத்தில் இடம்பெற்ற பிறந்த தின வைபவத்தில் ஏராளமானோர் அழைக்கப்பட்டு கலந்து கொண்டிருந்த நிலையில் வைபவத்தை ஏற்பாடு செய்திருந்தவர்கள் குறித்த நபரை தாம் வைபவத்திற்கு அழைத்திருக்கவில்லை என்றும், அவர் யார் எவர் என்ற விபரம் தெரியாது என்றும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த பிறந்த தின வைபவம் நள்ளிரவு 2.00 மணி வரையில் இடம்பெற்றதுடன் அந்நிகழ்வில் அழைப்பில்லாமல் கலந்து கொண்ட இந்நபர் அங்கு உண்டு குடித்துவிட்டு நள்ளிரவு வேளையில் மண்டப உரிமையாளரின் வீட்டில் உரிமையாளரின் தாய், மனைவி மற்றும் பிள்ளை ஆகியோர் உறங்கிக் கொண்டிருந்த போது உரிமையாளரின் தாயின் அறையினுள் நுழைந்ததை அவதானித்த உரிமையாளரின் தாய் சத்தம் போட்டதில் கலவரமடைந்த வைபவத்தில் கலந்து கொண்டிருந்தவர்கள் அங்கு சென்று அந்நபரைப் பிடித்து அவரைத் தாக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் விழா மண்டப உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளதோடு குறித்த நபரும் கைது செய்யப்பட்டு பொலிஸ் பாதுகாப்புடன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஆராச்சிக்கட்டு பொலிஸார் இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments:
Post a Comment