மட்டக்களப்பில் கலைஞர்கள், மற்றும் ஊடகவியாளர்களை கெளரவிக்க வருகை தந்துள்ள இயக்குனர் இமயம் பத்மஸ்ரீ பாரதிராஜாவுக்கு இளைஞர்கள் சிறப்பு மரியாதை செய்து கெளரவித்தனர்.
லண்டன் அகிலன் பவுண்டேஷனின் அனுசரைணயில் மட்டகளப்பு மாவட்ட முது பெரும் கலைஞர்கள், இளம் கலைஞர்கள் மற்றும் ஊடகவியலாளர்களை கெளரவிக்கும் நிகழ்வு புதுக்குடியிருப்பு கதிரவன் கலைக்கழகத்தின் தலைவர் த. இன்பராஜா தலைமையில் கிரான்குளம் சீமுன் கார்டனில் இன்று நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியா இயக்குனர் இமயம் பத்மஸ்ரீ பாராதிராஜா கலந்து கொண்டுள்ளார்.
இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 30 கலைஞர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் பாரதிராஜாவால் கௌரவிக்கப்பட்டனர்.
முன்னதாக மட்டக்களப்பிற்கு வந்த பாரதிராஜாவுக்கு இளம் பெண் உள்ளிட்ட இளைஞர்கள் சிலர் அவர் தங்கியிருந்த அறைக்கு சென்று அவரது பாதங்களை தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்து சிறப்பு மரியாதை செய்தனர்.
கால் வலிக்கு முதலுதவி செய்வதற்கும் பாதத்தை கழுவி சேவகம் செய்வதற்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் நிறைந்திருக்கும் உலகு இது..
இப்படத்தினை முகநூலில் பதிவேற்றி பாரதிராஜா என்ற சினீமாக்காரனின் காலை கழுவி விடுகிறார்கள் ஈழத்து உறவுகள் அவர்களுக்கு வெட்கமில்லையா என்று சிலர் முகநூலில் பொங்கி படையல் வைக்கின்றனர்.
அவர்களின் கவனத்திற்கு...
வயதானவர்கள் அதிகதூரம் நடந்தாலோ அல்லது அதிக நேரம் ஒரே இடத்தில் நின்றாலோ பாதத்தில் நோ ஏற்படுவது வழமை.
அதனைப்போக்க அம்மா பாதம் ரொம்ப நோகுது கொஞ்ச நேரம் வெதுவெதுப்பான தண்ணிக்க காலை வச்சிருந்தா நல்லா இருக்கும்போல இருக்கு கொஞ்சம் சுடுதண்ணி வச்சி தாரியாம்மா என்று மகள்களை கேட்காத வயதான அப்பாக்கள் மிகவும் குறைவு. அதேபோல் வைத்துக்கொடுக்காத மகள்களும் குறைவு.
அதேபோன்றுதான் தன் பாதம் நோ குறித்து அருகில் இருந்த உறவுகளிடம் பாரதிராஜா சொன்னவுடன் சற்றுநேரம் வெதுவெதுப்பான நீரில் பாதத்தை வைத்திருந்தா சரியாகிப்போகும் என்று அவர்களும் வெதுவெதுப்பான நீரினை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதனுள் பாதத்தினை வைக்கச்சொல்கின்றனர் பாரதிராஜா வும் அதைச்செய்து அதன் ஆசுவாசத்தினை அந்தப்பாசத்தினை அனுபவிக்கின்றார் இதில் என்ன மாபெரும் ஒழுக்க கேட்டினையும் தரக்குறைவின்மையையும் கண்டுவிட்டீர்கள் மக்களே?
உங்கள் வீடுகளில் பெரியவர்களுக்கு இவ்வாறான பணிவிடைகளை நீங்கள் செய்ததே இல்லையா? வெளிநாட்டில் காசுக்காக வெள்ளையர்களின் கக்கூசு தொடக்கம் கழுவுகிறீர்களே அதுவெல்லாம் உங்களுக்கு அசிங்கமில்லை ஒரு மனிதனின் கால் நோவுக்கு சுடுநீர் ஊற்றியதால்தான் ஈழத் தமிழன் மானம் போய்விட்டதா?
சினீமாக்காரனுக்கு கால் நோகாதா? சினீமா காரனுக்கு அரசியல் தெரியாதா? சினீமாக்காரனுக்கு அன்பு பாசம் நேசம் உறவுகள் குடும்பம் என்று எதுவும் இல்லையா? சினீமாக்காரன் என்ன சந்திரமண்டலத்தில் இருந்து நேரா இறங்கிவந்த வேற்றுக்கிரக வாசிகளா? சினீமா என்பது கலை அது இலகுவில் எவனுக்கும் வாய்த்துவிடாது.
ஒழுங்கா செல்போனைப்பிடிச்சு செல்பியே எடுக்கத்தெரியாத கூட்டமெல்லாம் பாரதிராஜா வைப்பார்த்து சினீமாக்காரனுக்கு என்ன தகுதி இருக்கென்று கேட்குதுகள்.
முதல்ல ஒரு போட்டோவை ஒழுங்கா எடுக்க பழகிப்பாருங்கடே அதுக்க எவ்வளவு விசயம் எவ்வளவு நுட்பம் இருக்கென்று தெரியும்.
கோயில்ல நாலு மந்திரத்தை பாடமாக்கி வச்சு காலா காலமா அதையே சொல்லிக்கொண்டு வரும் ஐயனுக்கு பாதபூசை பலகார பூஜையெல்லாம் செய்றிங்களே அது மானக்கேடு இல்லையா?
எல்லாத்தையும் விடுங்கடே "கருத்தம்மா" என்ற காவியத்தை எடுத்ததற்காகவே பாரதிராஜாவுக்கு காலம் காலமாய் கோவில் கட்டிவச்சு கும்பிடலாம். கண்ணீர் விடாமல் அப்படத்தை பார்த்து முடிக்கும் எவராவது இங்கு உண்டா?
கால் வலிக்கு தண்ணீர் உற்றியதால் ஈழத்தமிழ் இனத்தின் மாண்பு போய்விட்டதாம். அட பேப்பயலுகளே இதுதான்டா தமிழன் மாண்பே.
வீடுதேடிவந்த விருந்தாளியை மனம் நோகாது தேவை அறிந்து உபசரிக்கும் பண்பில் உயர்ந்தவர்கள் தமிழர்கள்.
தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய திருக்குறளில் விருந்தோம்பலுக்கென்றே தனி அதிகாரம் உண்டு. அதில் இருக்கும் பத்துக்குறள்களில் விருந்தோம்பலின் சிறப்பை அழகாக சொல்லியுள்ளார்.
"உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பாமடமை மடவார்கண் உண்டு."
விருந்தினரை வரவேற்றுப் போற்றத் தெரியாத அறிவற்றவர்கள் எவ்வளவு பணம் படைத்தவர்களாக இருந்தாலும் தரித்திரம் பிடித்தவர்களாகவே கருதப்படுவார்கள். என்கிறது வள்ளுவம்.
"இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்துணைத்துணை வேள்விப் பயன்."
விருந்தினராக வந்தவரின் சிறப்பை எண்ணிப் பார்த்து விருந்தோம்பலை ஒரு வேள்வியாகவே கருதலாம் என்று இக்குறளில் வள்ளுவர் சொல்கிறார்.
பாதத்தை கழுவி விடுவதற்கும் பாதத்தின் நோ தீர வெந்நீர் ஊற்றுவதற்கும் வித்தியாசம் தெரியாத தற்குறிகள் அதிகம் இருப்பது முகநூலில்தான். இவர்கள் வீட்டில் இருக்கும் வயதானவர்களை நினைக்கத்தான் வேதனை.
பாரதிராஜா வை விமர்சிக்க வேறு ஏதேனும் விடயங்களை தேடுங்கள் இப் படத்தை வைத்து விமர்சிக்க நினைத்து உங்களை நீங்களே தரம் தாழ்த்திக்கொள்ளாதீர்கள்.
நன்றி வணக்கம்.
சு.பிரபா
0 comments:
Post a Comment