தேனிலவை கழிப்பதற்காக இலங்கைக்கு சுற்றுலா வந்த பிரித்தானிய தம்பதியினர் மது சுவையில் மயங்கி புதிய ஹோட்டல் ஒன்றினை துவங்கியுள்ள சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது.
ஜினா லியோன்ஸ், 33, மற்றும் மார்க் லீ (35) என்ற பிரித்தானிய தம்பதி கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டு, தங்களுடைய தேனிலவை கழிப்பதற்காக மூன்று வார காலமாக டிசம்பர் மாதம் இலங்கைக்கு வருகை தந்தனர்.
அன்று இரவு Tangalle கடற்கரையில் அமர்ந்திருந்த தம்பதியினர், அங்கிருந்த பழமையான ஹோட்டல் ஒன்றில் ரம் வாங்கி குடித்துள்ளனர்.
ஆரம்பத்தில் சுவையில் மயங்கிய அவர்கள், இந்த ஹோட்டலை நாம் வாங்கி நடத்தலாமா என பேசியுள்ளனர்.
நேரம் செல்ல செல்ல போதையும் அதிகமாகியுள்ளது. உடனே இந்த விவாதம் பெரிதாக மாற, இதனை பற்றி தீவிரமாக பேச ஆரம்பித்துள்ளனர்.
அடுத்தநாள் விடிந்ததும், நிலத்தின் உரிமையாளரை சந்திக்க சென்றுள்ளனர். உள்ளுரை சேர்ந்த இசுரு என்பவரின் உதவியுடன் நிலத்தை குத்தகைக்கு எடுக்க முயற்சி செய்தனர்.
மூன்று வருடத்திற்கு 30000 பவுண்டுகள் என நிலத்தின் உரிமையாளர் கூற பிரித்தானிய தம்பதியினருக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது. பிரித்தானியாவில் இருந்தே ஹோட்டலை நடத்த முடியும் என்ற நம்பிக்கையில், வீட்டின் மேலாளராக இசுருவையும், மற்றொரு ஹோட்டலில் மேலாளராக பணிபுரிந்த மில்லிலா என்ற பெண்ணை ஹோட்டலின் பொதுமேலாளராகவும் நியமித்தனர்.
இருவரின் தலைமையிலும் ஹோட்டலை புதுப்பிக்கும் வேலைகள் படுஜோராக நடக்க ஆரம்பித்தது.
இந்த நிலையில் ஹோட்டல் வாங்கியுள்ள மகிழ்ச்சி குறித்து பேசியிருக்கும் ஜினா, நான் தற்போது கர்ப்பமாக இருக்கிறேன்.
எனக்கு குழந்தை பிறந்ததும் நாங்கள் இருவரும் எங்களுடைய சொந்த ஹோட்டலை சென்று பார்வையிடுவோம். தற்போது முன்பணமாக 15000 பவுண்டுகள் கொடுத்துள்ளோம். வரும் மார்ச் மாதம் மீதமுள்ள பணத்தை கொடுப்பதாக தெரிவித்திருக்கிறோம்.
இதனை வாங்கியபோது உறவினர்கள் அனைவரும் எங்களை முட்டாள் என நினைத்தனர். ஆனால் தற்போது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. எங்களுடைய வேலைகளை இசுருவும், மில்லிலாவும் கவனித்துக்கொண்டு எளிதாக்கியிருக்கிறார்கள்.
அடுத்த முறை செல்லும்போது இன்னும் நிறைய இடங்களை வாங்க வேண்டும் என நானும் என்னுடைய கணவரும் முடிவு செய்துள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment