இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அதிரடி அரசியல் மாற்றம் தொடர்பில், ஜனாதிபதி செயலகம் நேற்று இரவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் புதிய பிரதமராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டமை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
எந்தவித முன் அறிவிப்பும் இல்லாத நிலையில், தேசிய அரசாங்கத்தில் இருந்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நேற்றிரவு விலகியது.
இதனையடுத்து புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நேற்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
இந்த பதவியேற்று விவகாரம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதுடன், துறைசார் நிபுணர்கள் பல்வேறு கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, அரசாங்கத்தில் இருந்து விலகியதாக சபாநாயகரிடம் முன்னணியின் பொது செயலாளர் மஹிந்த அமரவீர அறிவித்துள்ளார்.
எனினும் எவ்வாறான மாற்றம் ஏற்பட்ட போதிலும், ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவே நாட்டின் பிரதமர் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
எப்படியிருப்பினும் மஹிந்த ராஜபக்ச புதிய பிரதமர் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி செயலகம், சமகால அமைச்சரவையை கலைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
நிதி அமைச்சர் மங்கள சமரவீர டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டு, மஹிந்த ராஜபக்ச பிரதமராக நியமிக்கப்பட்டமை ஜனநாயகத்திற்கு எதிரான செயற்பாடு. அது அரசியலமைப்பிற்கு எதிரான மற்றும் சட்டவிரோத செயல் என குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நல்லாட்சி அரசாங்கத்தில் இருந்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி விலகியவுடன், அரசாங்கத்தை கலைக்க முடியாதென சட்டத்தரணி அஜித் பீ பெரேரா தெரிவித்துள்ளார். எனவே பிரதமர் பதவியில் இருந்து நீக்குவதும் வேறு பிரதமரை நியமிப்பதும் சட்டவிரோதமான செயல் என குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்கும் குழுவுக்கு நாடாளுமன்றில் பெரும்பான்மை பலம் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
அதேவேளை அரசியலமைப்பின் பிரகாரம் தான் இன்னும் பிரதமாக செயற்படுவதாக ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை நாடாளுமன்றத்தின் அடுத்த பிரதமர் யார் என்பது தொடர்பில் கொழும்பு அரசியலில் பெரும் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment