இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ரோ குறித்து தான் தெரிவித்ததாக வெளியாகும் தகவல்களை மறுத்துள்ளார் என இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்திய பிரதமரின் அலுவலகம் இது குறித்து செய்திக்குறிப்பொன்றை விடுத்துள்ளது.இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்திய பிரதமருடன் தொலைபேசி மூலம் உரையாடினார் என இந்திய பிரதமரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இலங்கை ஜனாதிபதி தன்னையும் இலங்கையின் முன்னாள் பாதுகாப்பு செயலாரையும் கொலை செய்வதற்கான சதி முயற்சிகளின் பின்னால் இந்திய புலனாய்வு அமைப்பு உள்ளதாக தான் குற்றம்சாட்டியதாக வெளியாகியுள்ள செய்திகளை நிராகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார் எனஇந்திய பிரதமரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
தீயநோக்கத்துடனான தவறான அறிக்கைகள் ஆதாரமற்றவை பிழையானவை என சிறிசேன தெரிவித்தார், எனவும் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ள இந்திய பிரதமர் அலுவலகம் இந்த செய்திகள் இரு தலைவர்களிற்கு இடையிலான உறவுகளில் பாதிப்பை ஏற்படுத்துவதை நோக்கமாக கொண்டவை என சிறிசேன குறிப்பிட்டார் எனவும் தெரிவித்துள்ளது.
இருநாடுகளிற்கும் இடையிலான உறவுகளிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் நோக்கத்தை அடிப்படையாக கொண்ட முயற்சியிதுவெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த செய்திகளை நிராகரிப்பதற்காக தானும் இலங்கை அரசாங்கமும் உடனடியாக எடுத்துள்ள நடவடிக்கைகளையும் சிறிசேன இந்திய பிரதமரிற்கு தெளிவுபடுத்தியுள்ளார்.
இந்திய பிரதமர் நரேந்திரமோடியை இலங்கையின் உண்மையான நண்பராகவும் தனது சிறந்த நண்பராகவும் கருதுவதாக சிறிசேன தெரிவித்தார் எனவும் இந்திய பிரதமரின் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான பரஸ்பரம் நன்மையளிக்ககூடிய உறவுகளை தான் மதிப்பதாக சிறிசேன வலியுறுத்தியுள்ளார்,இந்திய பிரதமருடன் தொடர்ந்தும் இணைந்து பணியாற்றுவது குறித்து ஆர்வமுள்ளதாகவும் சிறிசேன தெரிவித்துள்ளார் எனவும் இந்திய பிரதமரி;ன் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை இந்த விவகாரம் தொடர்பில் தீயநோக்கம் கொண்ட தகவல்களை நிராகரிப்பதற்கு இலங்கை அரசாங்கமும் ஜனாதிபதியும் எடுத்துள்ள துரிதநடவடிக்கையை இந்திய பிரதமர் பாராட்டியுள்ளார் என இந்திய பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அயல்நாடுகளிற்கு முன்னுரிமை என்ற இந்தியாவின் கொள்கையை மீண்டும் இந்திய பிரதமர் வலியுறுத்தியுள்ளார் என இந்திய பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
0 comments:
Post a Comment