கல்முனை பிரதேச செயலகத்தில் உள்ள விநாயகர் ஆலயத்தை அகற்றக்கோரி நீதிமன்றத்தில் கல்முனை மேயர் முறையிட்டுள்ளமை தமிழ் முஸ்லிம் மக்களிடையே இன ரீதியான முறுகல் நிலையை தோற்றுவிக்கும் செயலாகும் என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
கல்முனையில் உள்ள இந்து ஆலயத்தை அகற்ற முஸ்லிம் முதல்வர் நீதிமன்றத்தை நாடியிருப்பது தொடர்பாக இன்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
ஏற்கனவே கட்டப்பட்ட விநாயகர் ஆலயத்தை இடிக்குமாறு முறையிடுவது தமது தாயை அழிப்பதற்கு சமனானது என இந்துமக்கள் கருதுவார்கள், தமது வழிபாட்டு உரிமையை எந்த மதத்தை சேர்ந்தவர்களானாலும் அதை தடை செய்ய நினைப்பது, அகற்ற நடவடிக்கை எடுப்பது இனவாத சிந்தனை கொண்ட செயலாகவே அதனை கருதவேண்டியுள்ளது.
இவ்வாறுதான் கடந்த 1994 காலப்பகுதியில் ஓட்டமாவடியில் இருந்த காளி அம்மன் கோயிலை இடித்து அங்கு மீன் சந்தை அமைத்ததாக தற்போதைய அமைச்சர் ஹிஷ்புல்லா தெரிவித்தது மட்டுமன்றி அதனை எதிர்த்து நீதிமன்றம் செல்லும் வாய்ப்பு இல்லாமல் அந்த நீதிபதியை தாம் இடமாற்றியதாகவும் மார்பு தட்டி கூறினார்.
அது அவருக்கு பெருமையாக இருந்தது ஆனால், இந்து தமிழ் மக்களின் மனதை புண்படுத்தும் படியான கருத்தை ஹிஷ்புல்லா வழங்கினார், அவர் தமது முஸ்லிம் மக்களை திருப்திப்படுத்துவதற்காக எமது இந்துக்கோயிலை இடித்தது அவருக்கும் அவர்சாந்த இஸ்லாம் மக்களுக்கும் பெருமையாக இருக்கலாம் ஆனால் எமது தமிழ்மக்களுக்கு அது தீராத வடுவாகவே இன்றுவரை உள்ளது.
இன்றும்கூட அதற்கு எதிராக நாம் சட்ட நடவடிக்கை எடுக்கும் ஆதாரங்கள் இருந்தும் அவருக்கு எதிராக நாம் நீதிமன்றை நாடவில்லை. ஆனால் 1994ல் ஓட்டமாவடியில் அமைச்சர் ஹிஷ்புல்லா செய்த அதே பாணியில் தற்போது 2018ல் கல்முனை மேஜர் செய்ய முயல்கிறார் இதனை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.
எல்லா மதங்களுக்கும் அவரவர் சமய வணக்க நிகழ்வை பேண வழிபட உரிமை உண்டு கல்முனை விநாயகர் ஆலயம் பல வருடங்களுக்கு முன் கட்டப்பட்டு மகா கும்பாபிஷேகம் இடம்பெற்று வழிபாடுகள் தொடர்ச்சியாக நடைபெற்றுவருவது கண்கூடு, அந்த ஆலயம் அங்கிருப்பதால் இந்த முதல்வருக்கு என்ன இடையூறு உள்ளது எனபதை அவர் தெரிவிக்கவேண்டும்.
சாதாரண கடைத்தொகுதி வீடுகள் பொதுக்கட்டடங்களை அகற்றுவதை போன்று மத வழிபாட்டு தலங்களை நினைத்த மாதிரி அகற்றுவது அந்த மதத்தை சார்ந்த மக்களின் மனநிலையை பாதிக்கும் செயல் என்பதை சம்மந்தப்பட்டவர்கள் விளங்கிக்கொள்ள வேண்டும்.
கல்முனை பகுதியில் பூர்வீக வரலாற்று காலமாக தமிழர்கள் வாழும் பிரதேசமாகும் அங்கு அவர்களின் வழிபாட்டு முறை தமிழ் கலாசார பண்பாடுகள் தொன்றுதொட்டு கடைப்பிடித்த இடமாகவே இருந்து வந்துள்ளது.
இந்த வரலாறுகள் மறைக்கவோ மறுக்கவோ முடியாத உண்மையாகும் அதனூடாக அமைத்ததுதான் இந்த கல்முனை ஆலயமாகும், இந்த ஆலயம் சட்டரீதியாகவோ, சம்பிரதாய ரீதியாகவோ அகற்றப்படுமானால் எதிர்காலத்தில் தமிழ், முஸ்லிம் உறவு நிலையில் பாரிய விரிசல் இனக்குரோதம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளமையால் நல்லாட்சி அரசு இவ்வாறான தடவடிக்கையை உடன் தடுத்து நிறுத்த வேண்டும்.
கல்முனை மாநகர சபையில் முட்டுக்கொடுத்து கொண்டிருக்கும் தமிழ் உறுப்பினர்கள் ஏனைய தமிழ் உறுப்பினர்கள் ஒன்றாக ஒற்றுமையாக கல்முனை இந்துக்கோயில் அகற்றும் நடவடிக்கையை எதிர்த்து குரல் கொடுத்து தடுக்க ஒன்றிணைய வேண்டும் அப்படி செய்யாவிட்டால் தமிழ் உறுப்பினர்கள் இருந்து என்ன பயன் என குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment