மட்டக்களப்பில் பாடசாலை சிறுமி ஒருவருக்கு இனம் தெரியாத நபர் ஒருவர் ஊசி ஏற்றியதால், சிறுமி மயக்கமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என்பதுடன், அந்த பொய் செய்தியை திரிவுபடுத்தி சமூக ஊடகங்களில் குரல்ப் பதிவிட்ட ஆசிரியரை இன்று திங்கட்கிழமை (6) வரவழைத்து வாக்கு மூலம் பெறப்பட்டு எச்சரித்து விடுவித்துள்ளதாக மட்டு தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் ஜி.எம்.பி.ஆர். பண்டார தெரிவித்தார்.
நகரிலுள்ள உள்ள பாடசாலையில் தரம் 5ல் கல்விகற்றுவரும் 10 வயது சிறுமி ஒருவர், கடந்த வெள்ளிக்கிழமை (3) பாடசாலை முடிந்து பிறபகல் 2.30 மணியளவில் பாடசாலை வளாகத்தில் பெற்றோர் வருவதற்காக காத்திருந்தார். அப்போது அங்கு வந்த, கறுத்த நிறத்திலான ரவுசரும் சேட்டும் முகத்திற்கு கறுத்த நிறத்திலான மாஸ் அணிந்த இளைஞன் ஒருவர் சிறுமியின் பேரை கேட்டார். பின்னர் பாடசாலையில் அனைவருக்கும் ஊசி போடுவதாகவும் உங்களுக்கு ஊசி போடவில்லை என தெரிவித்து சிறுமிக்கு ஊசி ஒன்றை ஏற்றிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளான். அதனால் சிறுமி ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் எனவே ஏனைய பிள்ளைகள் கவனம்; என ஆசிரியர் ஒருவர் குரல்பதிவிட்டு சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து மக்கள் மத்தியில் பெரும் பீதி ஏற்பட்டதையடுத்து இது தொடர்பாக மட்டு தலைமையக சிறு குற்றத்தடுப்பு பிரிவு சப் இன்பெக்ஸ்டர் விவேகானந்தன் தலைமையில் விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்தனர் . சம்பவ தினமான கடந்த வியாழக்கிழமை (2) சிறுமியை பாடசாலையில் இருந்து பிற்பகல் 2.30 மணிக்கு வீட்டிற்கு தந்தையார் மோட்டர் சைக்கிளில் அழைத்துச் சென்றதாகவும், அதன் பின்னர் சிறுமி தாயாரிடம் பாடசாலையில் இன்று ஊசி போட்டதாகவும், அதனால் வாந்தி எடுத்ததாகவும், மயக்கமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து தாயார் வகுப்பு ஆசிரியர், அதிபர் மற்றும் மாணவர்களின் பெற்றோரிடம் விசாரித்தபோது அப்படி ஊசி எதுவும் போடவில்லை என அறிந்து கொண்டார்.
இதன் பின்னர் அடுத்த நாள் வெள்ளிக்கிழமை சிறுமி காய்ச்சல் காரணமாக பாடசாலைக்கு செல்லவில்லை. இந் நிலையில் தந்தையாரிடம் தாயார், சிறுமி தனக்கு ஊசி போட்டதாக தெரிவித்த சம்பவத்தை தெரிவித்தநிலையில், மாலை 3 மணிக்கு மட்டு போதனா வைத்தியசாலை அவசர பிரிவில் சிறுமியை அனுமதித்து, சிறுமி தெரிவித்ததை அங்கு தெரிவித்து இரத்த சோதனை செய்யுமாறு தந்தையர் கேட்டுக் கொண்டார். இதனையடுத்து இரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டதுடன் சிறுமியை 29 வாட்டிற்கு மாற்றி சிகிச்சை அளித்துள்ளார்கள்.
அதேவேளை பாடசாலையில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.ரி கமராவை சோதனை செய்த பொலிசார் இவ்வாறான சம்பவம் எதுவும் இடம்பெறவில்லை என அறிந்துள்ளார்கள். ஆகவே சிறுமி பொய் செல்லியுள்ளார் எனவும் சிறுமி தெரிவித்தமை பொய் என தெரியாது, அதனை ஆசிரியர்களுக்கு தந்தையார் தெரிவித்ததாகவும், அதனை தனியார் கல்வி நிலைய ஆசிரியர் குரல்பதிவிட்டு சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளர் என பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது
இதனிடையே குறித்த சிறுமி மீது ஊசி ஏற்றிய எந்த தடையமும் இருக்கவில்லை என வைத்திய பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலையை பற்றி தவறான தகவல்களை குரல்பதிவிட்டு வெளியிட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் திருமதி கலாரஞ்சனி தெரிவித்தார்.
இதனையடுத்து சமூக ஊடகங்களில் குரல் பதிவிட்ட ஆசிரியரை பொலிசார் வரவழைத்து வாக்கு மூலம் பெறப்பட்டு அவரை எச்சரித்து விடுவிக்கப்பட்டுள்ளதுடன் சிறுமிக்கு வைத்திய பரிசோதனையின் இடம்பெற்றுவருகின்றது.
0 comments:
Post a Comment